July 07, 2007

அரவாணின் குறிப்புகள்







பாம்படத்தி

ஆழ்மனத்திலிருந்து
குமிழிகள் எழுந்து
உடலெங்கும் பரவியது

பெண்களின்சிநேகம்
அறுத்துப்போடப்பட்ட
இருக்கங்களில் முளைத்தது நேசம்

கனவைக்கொத்தியபடி
கூவியது சேவல்
யாரோ ஒருவரின் சேலாவாக்க
யாரோ ஒருவரிடம் ரீத்துபோட்டு
திருகு கோலமும்
திருட்டுதாவணிக்கட்டும்
அக்காவின் செருப்பும்
அபிநய பாவனையும்
வந்துகொண்டேயிருந்தது


பொண்டுகச்சட்டி
ஒம்பது
வார்த்தைகளின்
ஆயுதம்
தாயம்மாவிடம் நிர்வாண நாளை
முன் வைக்க கோரிக்கை
II
எதுவோடு
உறவாக
இடுகிறாயோ தடைகளை
தடைகளை தின்று
அதுவாகவே மாறுகிறேன்
இப்போது உன்னாள் புடுங்க முடியாது
உறுப்பையும்
பால் சீர் வழிந்து கொண்டிருக்கிறது
கோத்திக்ளோடு டீடீ யடித்து
பந்திகளோடு பீலீபண்ணி
III
மாத்தம்மாவின்
உடலுக்குள்ளிருந்து பாகங்களை
பிச்சைபெற்று
கடைகேட்டு போகிறவர்களில்

அரிதாக இருக்கிறது
பத்மினிகள் பத்மநாபனாகுவது
அம்பைக்கு பின்னால்

IV
என் மதமில்லை
என் சாதியில்லை
என் பால் இல்லை
எதுவுமில்லா மோனம்
குஞ்சையறுத்து
கூரையில் போடவேண்டுமென்றிருந்தது
V
சமூகம்
அவர்களுடைய
குரோமோசோம்களை திருடிக்கொண்டிருக்கிறது
பொட்டிபோடவும்
தந்தாவிலிருக்கவும்
எல்லோரும்
டைரீசியஸ் ஆகிவிடுகிறார்கள்
இங்கே
மனுசர்களாள் அன்னகர்களாக்கப்பட்டவர்கள்தான்
அநேகம்
VI
உன் சமூகம்
அழகென பூசி வைத்திருக்கிற
அழுகல்கள்
முகத்தில்
சண்டாசை எறிகிறது
என் ஜமாத்

1 comment:

  1. கவிதை அறுமை
    ஆனால் அந்த வலி திருநங்கைகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.
    அந்த வலியை உண்மையாக பதிவுசெய்துள்ளீர்கள்

    ReplyDelete

Footer